ஒரு காலத்தில்
மனிதன், விலங்குகளை வேட்டையாட
விலங்குகள், தாம் பிழைக்க, மனிதனைத் துரத்த
ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தப்ப முயல
அனைவரும் ஓட ,
எல்லோருடனும் நிம்மதியும் ஓடத் துவங்கியது.

விலங்குகளை விரட்டிய மனிதனுக்கு மண்ணாசை வாட்ட,
விலங்குகள் வாழ்ந்த காட்டுக்கும்  சொந்தம் கொண்டாடலானான்

வனங்கள் அழிந்து வீடுகள் முளைக்க
மரங்களின் தாகம் தீர்த்த நீர் நிலைகளும் தேவையற்றுப் போக
ஆற்றுப் படுகைகளிலும் மனிதக் காடுகள் முளைக்கலாயின

தான் வளர்த்த பிள்ளைகளான மரங்களைத் தேடி
மாரி அவ்வப் பொழுது ஓடி வர
காணாமல் போன, பொழிந்து வந்த பாதைகளைத்  தேடி அங்குமிங்கும்  அலைய

ஆங்காங்கே நட்டு வைத்த மரங்கள் மறைந்து போய்
கான்க்ரீட் காடுகளை உற்றுப் பார்த்து உச்சி முகர
வழி தெரியாமல் ஓடும் என்னைப் பார்த்து

வெள்ளமே ஏன் வந்தாய் என்று
அதட்டுகிறார்கள் , புலம்புகிறார்கள்.

– நனைந்த தமிழகத்தின் நிலை நினைத்து
ஒரு குளிர்ந்த காலையில்
பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பாலிருந்து
மறுகும் ஒரு சென்னை வாசி